நோய்களுக்கு முடிவாகும் முடக்கத்தான் கீரை
ஆரோக்கியம் தரும் பல்வேறு கீரை வகைகளுள் ‘முடக்கத்தான்' எனப்படும் இந்த கீரை வகை பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை நீக்கி, நன்மைகளைத் தருகிறது. இந்த அற்புத கீரை பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டு அறியலாம் இங்கே!
கொல்லைப்புற இரகசியம் தொடர்
காலையில் தொடங்கிய மழை விடாமல் அடை மழையாக கொட்டித் தீர்த்து கொண்டிருக்க, குடையைப் பிடித்துக்கொண்டு உமையாள் பாட்டியின் வீட்டிற்குள் தஞ்சமடைந்தேன்.
முடக்கு வாதத்தை நீக்கும் சக்தி இந்த கீரைக்கு இருக்கறதால, முடக்கத்தை அறுப்பதுன்னு அர்த்தம் வர்ற வகையில இதுக்கு பேர் வச்சிருக்காங்க நம்ம முன்னோர்கள்
சென்னையில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்கள் அவதிப்படும் காட்சிகள் நியூஸ் சேனலில் ப்ரேக்கிங் நியூஸாக ஓடிக்கொண்டிருந்த வேளையில், பாட்டி அடுப்பங்கரையில் சூடான பானம் ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து வந்த மணம் எனது ருசி பார்க்கும் ஆவலைத் தூண்ட, அடுப்பங்கரைக்குள் பிரவேசித்தேன்.
பாட்டி தயாரித்துக் கொண்டிருந்த ‘முடக்கத்தான் கீரை சூப்’ எனது கைகளுக்கு ஒரு குவளையில் வந்ததும், மழைக்கு இதமாக காரசாரமாக இருந்த அந்த முடக்கத்தான் சூப்பை ருசிக்கத் தொடங்கினேன்.
“இந்த பேர் வித்தியாசமா இருக்கே பாட்டி, இதுக்கு அர்த்தம் என்ன?!” பாட்டியிடம் முடக்கத்தான் கீரையின் பெயர்க் காரணத்தை முதலில் கேட்டேன்.
“முடக்கு வாதத்தை நீக்கும் சக்தி இந்த கீரைக்கு இருக்கறதால, முடக்கத்தை அறுப்பதுன்னு அர்த்தம் வர்ற வகையில இதுக்கு பேர் வச்சிருக்காங்க நம்ம முன்னோர்கள்” பாட்டி பெயர்க் காரணத்தை கூறியதும், அதன் மருத்துவ குணங்களை மேலும் அறிய நினைத்தேன். அப்படியே காலியான எனது சூப் டம்ளரில் இன்னும் கொஞ்சம் ஊற்றும்படி கேட்டு வாங்கிக்கொண்டேன்.
முடக்கத்தான் கீரை பயன்கள்
.jpg)
வாத நோய்கள்:
பொதுவாக வாத நோய்கள் அதிகமா வரும் காலமா, குளிர் காலமான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் இருக்குன்னு சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த முடக்கத்தான் கீரை, வாத நோய்களுக்கு நல்ல தீர்வா இருக்கு.
மலச்சிக்கல், கரப்பான், கிரந்தி:
முடக்கத்தான் கீரையில வைட்டமின்களும், தாது உப்புகளும் இருக்கு. இதை உணவுல தொடர்ந்து சேர்த்துட்டு வந்தா மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களும் குணமாக உதவும்.
தோல் நோய்கள்:
முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணமா இருக்கு. முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு சொறி, சிரங்கு மாதிரி தோல் நோய் இருக்கும் இடத்துல பற்று வச்சா நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மூல நோய்:
மலச்சிக்கல்னால மூல வியாதி வந்தவங்க தினமும் பச்சையா கொஞ்சம் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தா, மூல நோய் விரைவில் குணமாகும்.
காது வலி:
காது வலி பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு சாறெடுத்து, அதுல சில துளிகளை காதுகளுக்குள் விட காது வலி நீங்கும்.
மாதவிடாய் பிரச்சனைகள்:
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வா முடக்கத்தான் செயல்படுது.
குழந்தை பெற்ற பெண்களுக்கு…
இந்த முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு குழந்தை பெற்ற பெண்களுக்கு அடிவயித்துல பூசி வந்தா கருப்பையில உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
மூட்டு வலி:
முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, உடல்ல வாதத் தன்மை கட்டுப்பட்டு, மூட்டு வலியை போக்கும். முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில நனைச்சு எல்லா மூட்டு பகுதிகளிலும் தேச்சு வந்தாலும் மூட்டு வலியிலிருந்து குணம் கிடைக்கும்.
தலைவலி:
ஜலதோஷத்தால வர்ற தலைவலிகளுக்கு முடக்கத்தான் இலைகளை நல்லா கசக்கி, வெந்நீர்ல போட்டு ஆவி பிடிச்சா தலைவலி சரியாகும்.
பொடுகு தொல்லை:
பொடுகுத் தொல்லை இருக்கறவங்க முடக்கத்தான் இலைகள் சேர்த்து செஞ்ச எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தா பொடுகு தொல்லை நீங்கும். பாட்டி முடக்கத்தானின் பயன்களைச் சொல்லி முடிக்க எனது சூப்பும் காலியானது.
முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கலந்து தோசையாகவும் துவையலாகவும் சாப்பிடலாம் என்று தெரிந்தபோது இன்னும் எனக்கு ருசிபார்க்கும் ஆவல் கூடியது.
இப்போது வெளியில் மழை கொஞ்சம் வெறித்தது போல இருந்தது. கிளம்பும் முன் உமையாள் பாட்டியிடம் இன்னொரு கேள்வியும் கேட்க நினைத்தேன்.
“சென்னையில கோடை காலத்துல தண்ணி இல்லன்னு சொல்றாங்க, மழைக்காலத்தில் வீடு நிறைய தண்ணி வந்துருதுன்னு, படகுல போறாங்க. இதுக்கெல்லாம் என்ன காரணம் பாட்டி?!” பாட்டியிடம் ஆதங்கத்துடன் கேட்க, “நல்ல ஏரியாவா பார்த்து வீடு கட்டணும்ப்பா, ஏரிகளா பார்த்து கட்டுனா இப்படித்தாம்ப்பா…!” பாட்டி சொல்லிவிட்டு, கொல்லைப்புறத்துல பிடித்து வைத்த மழைநீரை வடிகட்டி சேமிக்கும் வேலையைத் தொடங்கினாள்.
.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக