பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி; அசத்தும் பொறியியல் பட்டதாரி!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான சிவரஞ்சனி. தொலைந்துபோன பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழகத்தில் மட்டுமன்றி இந்திய அளவிலும் தொலைந்த பாரம்பர்ய நெல் ரகங்களை, தன் கணவர் சரவணன் உதவியுடன் தேடிச்சென்று வருகிறார். அவற்றில் பல நெல் ரகங்களைக் கண்டறிந்து தனது வயலிலும் பயிரிட்டுள்ளார்.

இதுபற்றி சிவரஞ்சனியிடம் பேசினோம்.
``பண்டைய காலம் முதல் இந்தியாவில் சுமார் 22,000-க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்துள்ளதாகத் தெரிகிறது. அவற்றில் மிக மிகக் குறைந்த அளவிலான நெல் ரகங்களையே தற்போது காண முடிகிறது. என் வாழ்நாளில் என்னால் முடிந்தளவு தொலைந்து போன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உறுதியுடன் உள்ளேன். அஸ்ஸாம், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எனது தேடலை விரிவுபடுத்தி இலுப்பைப்பூ, சம்பா, கருங்குருவை, மடுமுழுங்கி, நவரா, பால்குடவாழை, வெள்ள குடவாழை, செம்புலி பிரியன், கடற்பாலி உள்ளிட்ட பல தொலைந்த பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டுள்ளேன்.
மேலும் தங்கத்தம்பா, சொர்ணமுகி, சொர்ணமல்லி, வாடன் சம்பா, புழுதிக்கார், செங்கல்பட்டு, சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும் ஊட்டச்சத்துக்களையும் உடைய நெல் ரகங்களையும் பயிரிட்டுள்ளேன்.
எங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் ஒவ்வொரு நெல் ரகங்களையும் 40 சதுர அடி என்ற அளவில் அவற்றைச் சாகுபடி செய்துள்ளேன். தற்போது அவை நன்றாகக் கதிர் விட்டுள்ளன. இவற்றை அறுவடை செய்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல்லாக வழங்கவுள்ளேன்" என்றார்.
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத பல பாராம்பர்ய நெல் வகைகளை சிவரஞ்சனி தேடிக் கொண்டுவந்து பயிரிட்டுள்ளார் என்பதோடு, ``பாரம்பர்யமான நெல் ரகங்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதே எனது இலக்கு" என்றும் உறுதிபடக் கூறுகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக